ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்
ஜாதகத்தில் சனி - செவ்வாய் சேர்க்கை பார்வை இருந்தால், கும்பகோணம் - நாச்சியார்கோவில் பூந்தோட்டம் சாலையில் உள்ள கூந்தலூர் என்ற ஊரில் ஜம்புகாரண்யேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு முருகன் சந்நதி நேர் எதிரே சற்று ஓரமாக சனிபகவான் சந்நதி உள்ளது. இங்கு செவ்வாய்கிழமை அல்லது சனிக்கிழமை சென்று உங்கள் பெயருக்கு அரச்சனை செய்து கொள்ளுங்கள். சனி - செவ்வாய் சேர்க்கையின் தோஷம் குறையும்.
ஏழை முதல் பணக்காரர்கள் வரை அதிக பயம் கொள்வது சனிக்கு மட்டுமே என்றால் அது மிகையில்லை. எல்லோரும் சனி பகவான் தீமையை மட்டுமே செய்வார் என பயந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அப்படியில்லை. `சனி கொடுத்தால் எவர் தடுப்பார்’ என்ற பழமொழி உண்டு. இதன் அர்த்தம் என்னவென்றால் சனி இன்பத்தை கொடுத்தாலும், துன்பத்தை கொடுத்தாலும் யாராலும் தடுக்க இயலாது என்பதாகும். மற்ற கிரகங்களை போல இல்லாமல் சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் சஞ்சரிக்கிறார். ஆகவே, ஒவ்வொருவரின் வாழ்விலும் மாற்ற முடியாத பெரிய மாற்றத்தை தருகிறார். `முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை.
முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை’ என்கின்ற பழமொழிக்கு ஏற்ப, எல்லாவற்றையும் மாற்றிவிடுவார். மாற்றத்தின் நாயகன் சனிபகவான். சனிபகவான் மனிதர்களிடம் எதிர்பார்ப்பது நேர்மையை மட்டுமே. ஆனால், ஆசையின் வலையில் சிக்கிய மனிதர்கள், உண்மை, நேர்மை, தர்மத்தை ஒதுக்கிவிட்டு பலரும் அதர்மத்தை செய்வதனால், சனிபகவானின் தண்டனைக்கு தங்களை தாங்களே தயாராகிக் கொள்கிறார்கள். கவலைப்பட வேண்டாம். சனி பகவான் எப்பொழுதுமே ஒருவனின் தவறான செயல்களுக்கு மனம்வருந்த செய்ய நோகடிப்பானே தவிர, கண்டிப்பாக சாகடிக்க மாட்டான். நீங்கள் செய்த தவறுகளை நீங்கள் உணர வைக்கவே முயற்சிக்கிறான் என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
தனுசு ராசிக்குள் பிரவேசம்
இந்த காலகட்டத்தில் சனி கேதுவுடன், ராகுவின் பார்வையுடன் தனுர் ராசியின் அதிபதியான குருவின் செயலையே உலகம் முழுவதும் ஸ்தம்பிக்கச் செய்தான். அதாவது, கோயில்கள், மசூதி, தேவாலயம் போன்ற வழிபாட்டு தளங்களையே திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. `கொரோனா’ என்ற அரக்கனும் விஸ்வரூபம் எடுத்தான். காலபுருஷனுக்கு 10-ஆம் இடம் உத்யோகம் ஆகும். எல்லோரும் வேலைக்கு செல்ல முடியாத விநோதத்தை கண்டோம். பல கட்டுபாடுகளுக்குள் நாம் சிக்கிக் கொண்டோம். உணவிற்கு கஷ்டப்படும் சூழ்நிலை கண்டோம்.
மகரத்திற்குள் பிரவேசம்
வேலை இழந்தவர்கள் பலர், வேலையை தேடி பெற்றனர். உலகம் முழுவதும் உள்ள தொழில்கள், சிறுக சிறுக முன்னேற்றத்தை நோக்கி நகர்கின்றன. இந்த காலகட்டத்தில் ஐ.டி துறையில் பணிபுரிபவர்கள் ஏராளமானவர்கள் வேலையில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டனர். ஆம்! ஐ.டி துறைக்கு நெருக்கமாக இந்த கிரகம் தொடர்பு கொண்டிருக்கிறது.
இதுவரை இப்படி நடக்குமா? என நினைக்காமல் திடீர்ரென வேலை இழந்த சம்பவம் ஐ.டி மக்களை பாதித்திருக்கும். கவலைப்படவேண்டாம். மாற்றம் என்பது உலகின் இயற்கையின் விதி. மாற்றத்திற்கு பிடித்த செயலே மாற்றம்தான். சினிமா மற்றும் மீடியா துறையில் புதிதாக ஓடிடி தளம் பிரசித்தம் ஆனது.
எல்லோரும் ஓடிடி தளத்திலேயே படத்தை திரையிடுவதற்கு முயற்சித்தனர். அதில், பலர் வெற்றியும் கண்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. மகரத்திலிருந்து, கடக ராசியை பார்வை செய்வதால் பெண்கள் மற்றும் நீர் தொடர்பான பிரச்னை ஏற்பட்டு தீர்வு நிலைக்கு வரும் காரணம் மீன ராசியில் இருந்து குரு பகவான் பார்வை செய்வதால்.
கும்பத்திற்குள் பிரவேசம்
வரும் 29 - 3 - 2023ம் தேதியிலிருந்து சனி பகவான் கும்ப ராசிக்குள் பிரவேசம் செய்கிறான். இப்பொழுது என்ன நடக்கும்? கனிமங்கள் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் போன்ற துறைகளில் பாதிப்பு ஏற்படும். சனிபகவான், சிம்ம ராசியை பார்வை செய்வதால், அரசியல் மற்றும் நிர்வாகம் தொடர்பான துறைகளில் மாற்றம் உண்டாகும். நெருப்பு மற்றும் பூகம்பம் பிரச்னைகள் ஏற்படும்.
தனுசு, மகரம், கும்ப மற்றும் மிதுன ராசி காரர்களே!
உங்களை மிகவும் சனிபகவான் வாட்டியிருந்தால், கொஞ்சம் மனதால் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். தர்ம சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். மீண்டும் அதர்மத்தை தவிர்க்க முயற்சியெடுங்கள். இழந்தவைகள் ஒரு நாளும் திரும்பவராது. ஆகவே, இழந்தவைகளால் பெற்ற அனுபவம் உங்களுக்கு பெரிய அனுபவ அறிவாக, உங்கள் வாழ்க்கையின் உயர்வுக்கு வித்திடும்.
சனி பகவானின் கருணையான தீட்சண்யத்திற்குள் (அருள் பார்வைக்குள்) எப்படி செல்வது?
சனிபகவான் தானம் செய்பவர்களை தன் கருணை கண்களால் பார்க்கிறான். ஆகவே, தானம் செய்யுங்கள். உலகத்தில் சிறந்த தானம் பசியை போக்குவதே. ஏனெனில், மற்ற பொருட்களில் எல்லையற்ற ஆசையினால் மனநிறைவாகாது. ஆனால், பசி மட்டுமே போதும் என்கின்ற திருப்தி அளிப்பதாக இருக்கும். ஆகவே, உணவினை தானம் செய்யுங்கள்.
சனிக்கிழமையன்று பூமியின் மீது சனியின் கதிர்கள்
அதிகமாக விழும். அன்று விரதம் மேற்கொள்ளுங்கள். மனம் தெளிவாக இருக்கும். முடிந்தவரை சனிக்கிழமை அன்று அசைவத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். பொறுமை அவசியம். ஊனமுற்றவர்களுக்கு உதவுதல், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்தல், காக்கைகளுக்கு உணவளித்தல் போன்றவற்றை தொடர்ந்து செய்யுங்கள்.
தாந்திரீகப் பரிகாரம்
லாட காந்தம் என்று சொல்லக்கூடிய ‘U’ வடிவ காந்தத்தை எப்பொழுதும் பாக்கெட்டிலோ அல்லது பர்ஸிலோ வைத்துக் கொள்ளுங்கள். எருமைப் பாலை வாங்கி ஆசிரமக் குழந்தைகளுக்கு தானம் செய்யுங்கள். சனியின் குருநாதர் காலபைரவர். எனவே, தேய்பிறை அஷ்டமி திதியில் காலபைரவருக்கு தேங்காயில் தீபம் ஏற்றுங்கள். குபேரனுக்கே குபேர சம்பத்தை பெரும் தனத்தை வாரி வழங்கியவன் சனிபகவான் என்பதை மறக்கவேண்டாம். நாம் தர்ம வழியில் நின்றால், நிச்சயம் நிறைய கொடுப்பான். அச்சம் வேண்டாம்! அமைதியான அறநெறி போதும்!